ஸ்ரீ விருதுநகர் பராசக்தி மாரியம்மன் பங்குனி பொங்கல் திருவிழா !

தன்னை நாடிவரும் பக்தர்களை நலன்காக்கும் ஸ்ரீபராசக்தி மாரியம்மனின் திருவிழாவானது தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற திருவிழாவாக இருந்து வருகிறது. விருதுநகர் வாழ்மக்கள் எங்கு வசித்தாலும் பங்குனி பொங்கல் திருவிழாவுக்கு ஊர் வந்து மாரியம்மனின் அருளை பெறுவர் 

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழாவானது அகிலாண்டநாயகி மாரியம்மனுக்கு உகந்த மாதமானது பங்குனி முதல் நாளில் தொடங்கும் . பொங்கல் பண்டிகைக்கு முன் ஏழு தினங்களுக்கு முன்னால் ஞாயிற்றுக்கிழமை நல்ல நேரத்தில் விருதுநகர் ஸ்ரீபராசக்தி மாரியம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை தூப, தீபம் செய்வித்து ஆலய அர்ச்சகர் அம்மன் பணியாளர் சாட்டு முரசு கொட்டும்.



சாம்பன் அனைவரும் அம்மன் முன் காப்புகட்டி அம்மன் பணியை பக்தி சிரத்தையோடு செயல்புரியத் தொடங்குவர். அருள் புரிவதை முன்போல வீதி வழிமுறையில் சாட்டு முரசு வழங்கிடுவர். சாற்றுதலுகுப்பின் கோவிலிலும் கயிறு குத்துவோர், அக்கினிச்சட்டி எடுப்பவர்கள், இரதம் இழுப்பவர்கள் வீடுகளிலும் வேப்பிலைத் தோரணம் கட்டப்படுகிறது. 

பக்தர்கள் தங்கள் கையில் காப்புக்கட்டி கொள்கின்றார். சாற்றிய தினத்திலிருந்து பதினைந்தாம் நாள் இரவு ஸ்ரீமாரியம்மன் கோவிலில் கொடியேற்றுவைபவம் நடைபெறுகின்றது. பொங்கல் சாற்றிய தினத்தில் இருந்து 21 நாட்கள் விரதம் இருந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவர் கொடியேற்றிய பின் ஏழாம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று பொங்கல் விழாவும், பொங்கல் அன்று பொங்கல் வைத்தல், மொட்டை எடுத்தல், உருண்டு கொடுத்தல், மாவிளக்கு எடுத்தல், ஆயிரம் கண்பானை வைத்தல், நீர் ஊற்றுதல், ஆக்கிவைத்தல் போன்ற நேர்த்தி கடன்களை செலுத்துகின்றனர். 


அதற்கு மறுநாள் திங்களன்று கயிறுகுத்து திருவிழா என்பது பொங்கலின் உச்சகட்ட திருவிழாவரும் பக்தர்களில் ஆயிரக்கணக்கானோர் இருகைகளிலும் தீச்சட்டிகளை ஏந்தி வருவார்கள், சிலர் குழந்தை பாக்கியம் வேண்டி வரம் பெற்று குழந்தை பெற்ற பக்தர்கள் குழந்தைகளை தொட்டிலிட்டு அத்தொட்டிலை கழுத்தில் சுமந்த வண்ணம் கையில் தீச்சட்டியுடன் ஆகோ அய்யாகோ என்ற பக்தி கோஷத்துடன் வலம் வருவர். 

21 சட்டி எடுத்தல், வாய்ப்பூட்டு, தொட்டில் எடுத்தல், ரதம் இழுத்தல், பறவைக்காவடி, மாறுவேடம் பூசுதல், முளைப்பாரி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர். பொங்கல் பின்னிரவிலிருந்து செவ்வாய்கிழமை அதிகாலை வரை தொடர்ச்சியாக விடிய விடிய ஆயிரக்கணக்கில் ஆடவரும், பெண்டியரும், அக்கினிசட்டி எடுத்து வருவது விருதுநகரில் மட்டுமே நடைபெறுவதாகும். 

அக்கினிச் சட்டிக்கு அடுத்தநாள், செவ்வாய்கிழமை தேர்திருவிழாவாகும் தேரோட்டத்தில் ஸ்ரீபராசக்தி மாரியம்மனும் ஸ்ரீவெயிலுகந்தமனும் வீற்றிருந்து நகர்மக்களுக்கு அருள்பாலித்து விருதுநகர் மக்களை நலம்காத்து வருகின்றனர் என்பது விருதுநகர் மக்களுக்கு அறிந்த ஒன்றாகும், 

திருவிழாவுக்குகாக விருதுநகர் வாழ்மக்கள் விருதுநகரில் வந்த வண்ணம் உள்ளனர். விருதுநகரே விழாகோலம் பூண்டு உள்ளது. விருது நகர் வாழ்மக்களை காத்திடும் மாரியம்மனை வணங்கிடுவோம், அம்மன் புகழை நாளும் போற்றிடுவோ

விருதுநகர் மாரியம்மன் கோவில் வரலாறு!

விருதுநகர் மாரியம்மன் கோயில் நானுறு ஆண்டுகள் புலமை பெற்றது. அதில் வருடாந்திர திருவிழா 'பங்குனி பொங்கல்' மிகவும் பிரபலமானது. விருதுநகர், விருதுபட்டியாக இருந்தபோது 1780ல் கோயில் உள்ள இடத்தில், சிறிய பீடம் அமைத்து வழிபட்டு வந்தனர். 1859ல் பீடம் மீது, அம்மன் சிலை வைத்து வழிபடத் துவங்கினர். அன்று முதல், இக்கோயிலின் முக்கிய பண்டிகையாக, பங்குனி பொங்கல் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். 1918ல் கோயிலில், முதல்முறையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மண் சுவரால் ஆன கோயில் மூலஸ்தானத்திற்கு, 1923ல் புதிய கட்டடம் கட்டப்பட்டது. 1933 முதல் பங்குனி பொங்கல் திருவிழாவை, வெகு விமரிசையாக கொண்டாட துவங்கினர். 


சிறப்பு அம்சங்கள் & வழிபாடுமுறைகள்:-

தென்மாவட்டங்களில் நடைபெறும் திருவிழாக்களில் விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா மிகவும் பிரசித்தி பெற்றது.விருதுநகர் அம்மனின் சிறப்பு அம்சம், தாய் இடது கால் மடித்து, வலது கால் தொங்கும் கோலத்தில் அமர்ந்து காட்சி அளிக்கும். இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடம்பில் கரும் புள்ளி செம்புலி குற்றி, வேம்பால் அலங்கரிக்க பட்ட ஆடை உடுத்தி, அக்னிச்சட்டி எடுத்து, வாயில் சூலம் குத்தி, கரகம், ரதம் இழுத்து நகரம் முழுவதும் ஊர்வலம் வந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவர்.